Thursday, 5 February 2015

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய இரண்டு முக்கியமான நிலைகள்.

பொதுவாக திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது நாம் வெறும் நக்ஷத்திரப் பொருத்தத்தை மட்டும் பார்த்து பொருந்துகிறது அல்லது பொருந்தவில்லை என சொல்வது தவறு. திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் நீண்ட நாட்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு குலத்தை பெருக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இருவரும் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ்வதும் சந்தோஷமாக வாழ்வதும் இதன் முக்கிய அம்சங்கள். அது மட்டுமின்றி அவர்கள் இருவரது உடல், மனம், எண்ணம், செயல் ஆகிய அனைத்திலும் ஒருமைப்பாடு இருக்கிறதா என்பதும் முக்கியமான அம்சமாகும்.
நாம் முதலில் நீண்ட நாட்கள் வாழ்வதை ஜோதிட முறையில் எது தடை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
ஒருவரது வாழ்நாட்களின் வயதை நான்கு விதமாக ஜோதிடம் பிரித்துள்ளது. பாலாரிஷ்டம், அற்பாயுசு, மத்திம ஆயுசு, பூரண ஆயுசு என்பன அந்த நான்கு வகைகள்.
சுமார் 12 வயதிற்குள் ஒருவர் மரித்து விடுவாரே எனில் அது பாலாரிஷ்டம் என்கிற நிலையாகும்.
சுமார் 12 வயதிலிருந்து சுமார் 32 வயதுக்குள் ஒருவரது மரணம் சம்பவிக்கிறது என்றால் அது அற்பாயுசு என்கிற நிலையாகும். இதை எதிர்பாராத மரணம் என்றும் சொல்லலாம்.
சுமார் 32 வயதிலிருந்து சுமார் 75 வயது வரை தான் ஒருவர் வாழ்கிறார் என்றால் அவருக்கு மத்திம ஆயுசு என்று சொல்லவேண்டும்.
75 வயதுக்கு மேல் வாழ்பவர்கள் பூரண ஆயுசு பெற்றவர்கள் என்று சொல்லலாம்.
ஒருவரது சராசரி ஆயுசு எவ்வளவு என்பதை நாம் உத்தேசமாக கண்டு பிடிக்க சுலபமான வழி ஒன்று உள்ளது. இதில் பல நுண்ணிய விஷயங்களை ஜைமினி மஹரிஷி சேர்த்துள்ளார். அதைப் பற்றி கவலைப்படாமல் பொதுவாக சொல்லப்பட்ட அணுகுமுறையை மட்டும் பார்ப்போம்.
மூன்று ஜோடிகளை வைத்து ஒருவரது ஆயுளை கணிக்கலாம்.
1.     லக்னம் மற்றும் 8 ம் அதிபர் முதல் ஜோடி. (செவ்வாய்க்கும் சுக்கிரனுக்கும் ஒருவரே அதிபர் என்பதால் இதில் சில மாற்றங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அது இப்பொழுது நம்மைக் குழப்ப வேண்டாம்)
2.     சந்திரன் மற்றும் சனி இரண்டாம் ஜோடி.
3.     லக்னம் மற்றும் ஹோரா லக்னம் மூன்றாம் ஜோடி.
விதி முறைகள்:--
A.    ஒவ்வொரு ஜோடியிலும், இருவரும் சர ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவர் ஸ்திரத்திலும் மற்றவர் உபயத்திலும் இருந்தாலோ ஜாதகருக்கு பூரண ஆயுள்.
B.    ஒவ்வொரு ஜோடியிலும் இருவரும் உபய ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவர் சரத்திலும் மற்றவர் ஸ்திரத்திலும் இருந்தாலோ ஜாதகருக்கு மத்திம ஆயுள்.
C.    ஒவ்வொரு ஜோடியிலும் இருவரும் ஸ்திர ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவர் உபயத்திலும் மற்றவர் சரத்திலும் இருந்தாலோ ஜாதகருக்கு அற்பாயுள்.
முடிவு செய்யும் விதி முறைகள்:
·         மேற்கண்ட மூன்று ஜோடிகளில் இரண்டு ஜோடிகள் ஒரேவிதமான ஆயுள் காலத்தை தீர்மானித்தால் அந்த ஆயுள் காலத்தையே ஜாதகரின் ஆயுள் காலமாகக் கொள்ளவேண்டும்.
·         மூன்றாவது ஜோடியும் அதே ஆயுள் காலத்தைக் குறித்தாலோ அல்லது வேறு ஆயுள் காலத்தைக் குறித்தாலோ கீழே உள்ள அட்டவணைப்படி ஆயுளை உத்தேசமாக குறிக்கலாம்.
·         மூன்று ஜோடிகளும் வெவ்வேறு காலத்தைக் குறித்தால் மூன்றாவது ஜோடியான லக்னம் மற்றும் ஹோரா லக்னம் குறிப்பிட்ட ஆயுள் காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அட்டவணையைப் பார்க்கலாம்:-
ஜோடி 1 & 2
ஜோடி 3
உத்தேச ஆயுள்
அற்பாயுள்
அற்பாயுள்
32 வருடம்
மத்திம ஆயுள்
அற்பாயுள்
64 வருடம்
பூரண ஆயுள்
அற்பாயுள்
96 வருடம்
அற்பாயுள்
மத்திம ஆயுள்
36 வருடம்
மத்திம ஆயுள்
மத்திம ஆயுள்
72 வருடம்
பூரண ஆயுள்
மத்திம ஆயுள்
108 வருடம்
அற்பாயுள்
பூரண ஆயுள்
40 வருடம்
மத்திம ஆயுள்
பூரண ஆயுள்
80 வருடம்
பூரண ஆயுள்
பூரண ஆயுள்
120 வருடம்

குறிப்பு: இது ஒரு உத்தேச முறைதான். இதன் அடிப்படைக் கொள்கை என்னவென்றால் சர ராசிகள் பிரும்மாவாலும், ஸ்திர ராசிகள் ருத்ரனாலும், உபய ராசிகள் விஷ்ணுவாலும் ஆளப்படுகின்றன என்பது தான். எனவே சர ராசிகள் நீண்ட ஆயுளையும், ஸ்திர ராசிகள் குறைவான ஆயுளையும், உபய ராசிகள் மத்திம ஆயுளையும் கொடுக்கின்றன.
சரி, இப்பொழுது ஆயுள் கணிப்பு என்பது நமக்கு புரிந்து விட்டது அல்லவா?
திருமண வயது என்பது சுமர் 23 வயதுக்கு மேலேதான். அதனால் அற்பாயுசு என்கிற நிலையை எப்படிப்பட்ட கிரக நிலைகள் ஏற்படுத்தும் என்பதைப் பார்க்கலாம்.
1.     லக்னாதிபதி உச்சம் பெற்று அதே சமயம் ஒரு இயற்கை சுபரால் பார்க்கப்படாமல் இருந்து, சனி நவாம்சத்தில் கும்பத்திலோ அல்லது மீனத்திலோ அமர்ந்து ராகுவால் பார்க்கப்பட்டால் அது அற்பாயுள் நிலைக்கு ஜாதகரை கொண்டு செல்லும்.
2.     சந்திரன் 6, 8, ம் வீடுகளில் அமர்ந்து லக்ன கேந்திரங்களில் தீயவர்கள் அமர்ந்து சுபர் பார்வையற்று போனால் அற்பாயுள்.
3.     8 மற்றும் 12 ஆம் அதிபர்கள் பலமிழந்து, ஜாதகரின் லக்னம் உபய லக்னமாக அமைந்து அங்கு சனி அமர்ந்தால் அற்பாயுள்.
4.     8 ஆம் அதிபர் ஒரு கேந்திரத்தில் அமர்ந்து அதே சமயம் லக்னாதிபதி வலுவிழந்த நிலையில் இருப்பின் ஜாதகருக்கு அற்பாயுள்.
5.     சந்திரனின் நேர்ப்பார்வையில் செவ்வாயும் குருவும் லக்னத்தில் அமர்ந்து, ஏதேனும் ஒரு கிரகம் 8 ஆம் வீட்டில் அமர்ந்தால் அற்பாயுள்.
6.     லக்னாதிபதி லக்னத்திலும், 8 ஆம் அதிபர் 9 ஆம் வீட்டிலும் 8 ஆம் வீட்டில் ஒரு கிரகம் அமர்ந்து அதை ஒரு தீயவர் பார்க்க ஜாதகருக்கு அற்பாயுள்.
7.     லக்னத்தில் செவ்வாய் அமர்ந்து சூரியனும் சனியும் கேந்திரங்களில் அமர்ந்தால் ஜாதகருக்கு அற்பாயுள்.
8.     லக்னத்திலிருந்து 8 ஆம் அதிபரோ அல்லது சந்திரனிலிருந்து 8 ஆம் அதிபரோ 12 ஆம் வீட்டிலோ அல்லது ஒரு கேந்திரத்திலோ அமர்ந்தால் ஜாதகருக்கு அற்பாயுள்.
9.     சனி லக்னத்தில் அமர்ந்து அது அதற்கு பகை வீடாகி, இயற்கை சுபர்கள் 3, 6 மற்றும் 9 அல்லது 12 ஆம் வீடுகளில் அமர்ந்தால் ஜாதகருக்கு அற்பாயுள்.
10.  சூரியன், சந்திரன், சனி ஆகிய மூவரும் 8 ஆம் வீட்டில் மிகவும் நெருக்கமாக அமர்வது ஜாதகருக்கு அற்பாயுளைக் கொடுக்கும்.
11.  புதன் கேந்திரத்தில் பலமான நிலையில் அமர்ந்து 8 ஆம் வீட்டில் யாருமே இல்லையெனில் அது ஜாதகருக்கு அற்பாயுள் தரும்.
12.  லக்னாதிபதியும் சந்திரனும் பலமிழந்து ஆபோக்லீம ஸ்தானங்களில் ( 3, 6, 9, 12 ஆம் வீடுகள்) அமர்ந்து தீயவர் பார்வை பெறின் அற்பாயுள்.
13.  லக்னத்தில் சூரியன் அமர்ந்து அது பாப கர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டால் ஜாதகருக்கு அற்பாயுள்.
14.  8 ஆம் வீட்டில் ஒரு கிரகம் அமர்ந்து கேந்திரங்கள் எதிலும் ஏதேனும் சுபர் அமரவில்லையெனில் அது அற்பாயுளைத் தரும்.
15.  8 ஆம் வீட்டின் அதிபர் சனி அல்லது ஒரு தீயவராகி, இன்னுமொரு தீயவருடன் கிரக யுத்த நிலையில் மிகவும் நெருக்கமாக ஒரு தீய சஷ்டியாம்சத்தில் அமர்ந்தால் அது ஜாதகருக்கு அற்பாயுள் தரும்.
16.  லக்னத்தில் தீயவர்கள் அமர்ந்து சந்திரனும் தீயவர்களோடு சேர்ந்து சுபர் பார்வையற்று இருக்குமேயானால் அது அற்பாயுளைத் தரும்.
எந்த ஜாதகத்திலும் ஒருவருடைய ஆயுளைக் கணிப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம் தான். கவனம் தேவை. ஏதோ ஒரு நிலை நம் கண்களை மறைத்து விடும். சில சமயம் நம் கணிப்பும் தவறும். சந்திரனுக்கு 8 ஆம் பாவத்தொடர்பும், சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்பும் மிகவும் கவனமாக அலசப் பட வேண்டும்.

ஒரு ஆணையும் பெண்ணையும் சரியான முறையில் ஆராய்ச்சி செய்து சேர்த்து வைப்பது என்பது கம்பியில் நடப்பது போன்றதுதான். இங்கு கொடுக்கப்பட்டவை அனைத்தும் ஜோதிட வல்லுனர்களால் அவரது அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்ட விஷயங்கள். இவற்றுக்கு தர்க்க ரீதியாக நாம் காரணம் கண்டு பிடிப்பது என்பது சிரமம்.

அடுத்ததாக ஒருவரது உடல், மனம், எண்ணம், செயல் ஆகியவற்றின் ஆரோக்கிய நிலையை நாம் ஆராய வேண்டும்.

இதற்கு ஜாதகத்தில் லக்னத்தில் உள்ள பாதிப்புகளை அளவிட்டு உடல் ரீதியான ஆரோக்கிய நிலையை அறியலாம். சந்திரனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் மூலம் மன ரீதியான ஆரோக்கியத்தையும், புதனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் மூலம் புத்தி ரீதியான ஆரோக்கியத்தையும் அறியலாம். இதில் மிகவும் முக்கியமானது சந்திரனுக்கும் புதனுக்கும் ஏற்படும் பாதிப்புகள். இது அதிக அளவில் இருக்குமாயின் மன அழுத்தம், மன நோய், மனப் பிரிவு, மனச் சலனம், புத்தி தடுமாறுதல், நிலையான முடிவுகளை எடுக்க முடியாமல் தவித்தல் போன்ற பல நிலைகளால் ஒருவரது மண வாழ்க்கை பாதிப்படையும்.
சந்திரனுக்கு ஏற்படும் பாதிப்பு இரண்டு விதமான துன்பங்களைத் தரும். முதலில் இது ஒருவரது ஆயுளைப் பாதிக்கும். இரண்டாவது ஒருவரை மன நல மருத்துவரிடம் கொண்டு சேர்க்கும். இது ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் நிலையைப் பொருத்து அமையும்.

இப்படிப்பட்ட பாதிப்புள்ள மனிதர்கள் சமுதாயத்தில் பழகும்போது மிகவும் இயல்பாகப் பழகுவதாக மற்றவர்களால் உணரப்படுவர். ஆனால் ஆழ்மனதில் மிகுந்த தடுமாற்றங்களையும், மன அழுத்தத்தினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையுடனும் சில சமயம் தற்கொலை எண்ணத்துடனும் சில சமயம் கொடூர மனத்துடனும் வண்டி வண்டியான குழப்பங்களுடனும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களால் உடன் வாழ்பவர்களுக்கு மிகுந்த சிரமங்கள் இருக்கும்.

சனியால் பாதிக்கப்படும்போது அதிக துக்க உணர்வோடும், மிகுந்த மன அழுத்தத்துடனும் செயல் படுவார்கள். அவர்கள் அடுத்தவர்கள் தன்னைக் கொடுமைப் படுத்துவதாகவும், அடுத்தவர்களுக்காக தான் மிகுந்த தியாகங்களைச் செய்வது போலவும், அடுத்தவர்களால் தன் வாழ்க்கையே சீரழிந்து விட்டது போலவும், கற்பனை செய்துகொள்வார்கள். அதனால் அவர்களது வாழ்க்கை தடம் புரளும்.

செவ்வாயால் பாதிக்கப்படுபவர்கள் முரட்டுத்தனமான செயல்பாட்டுடன், சில சமயம் கொடூரமாக பழகுவார்கள். அவர்களது பேச்சில் வன்மம், கோபம், குரோதம் இருக்குமென்பதால் அவர்களோடு வாழ்பவர்கள் வெகு சீக்கிரத்தில் மன அழுத்தம் உண்டாகி வாழ்க்கையை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ராகுவினால் பாதிக்கப்படுபவர்கள் அடுத்தவரை நம்பாமல் தான் ஏமாற்றப்படுவதாக அதீத கற்பனையில் மூழ்கி கொலை செய்யும் எண்ணத்துக்கு தள்ளப்படுவார்கள்.

கேதுவினால் பாதிக்கப்படுபவர்கள் மிகுந்த தாழ்மை உணர்ச்சியினால் உந்தப்பட்டு தன்னை ஒதுக்கிக் கொள்வார்கள். அதிலிருந்து அவர்கள் விடுதலை தேடும் வழி தன்னைத் தானே அழித்துக் கொள்ளுதல்தான். சிலர் அதிலிருந்து தப்பித்துக் கொண்டு ஆன்மீக ஈடுபாடு கொண்டு சாமியார்களை அணுகுவார்கள்.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தீயவர்களால் பாதிப்பு அடையும்போது அவரது ஜாதகத்தில் வேறு என்ன சிறப்பு நிலைகள் இருந்தாலும் அவரிடமிருந்து விலகி இருப்பதே மற்றவருக்கு நல்லது.

இப்படிப்பட்ட ஜாதகங்களில் குரு, சுக்கிரன் அல்லது சந்திரன் இருக்கும் வீட்டின் அதிபர் ஆகியோரது பார்வை சந்திரனுக்கு இருப்பின் தாக்கத்தின் வீரியம் சற்றே குறையும். அப்படிப்பட்ட ஜாதகங்களில் மற்ற கிரகங்களின் நிலை நன்றாயிருக்க வேண்டும். அப்பொழுதான் தாக்கத்தின் வீரியம் குறையும்.

சந்திரனும் புதனும் விருச்சிகத்திலோ அல்லது மீனத்திலோ சேர்ந்து இருப்பின் வெளித்தோற்றத்தில் மிகுந்த அழகும் புத்திசாலித்தனமாய் பழகும் குணமும் அதே சமயம் உள்ளே பிசாசுத்தன்மையும் மறைந்திருக்கும் ஜாதகரை காணலாம். அப்படிப்பட்ட ஜாதகர் அடுத்தவர் அஞ்சி நடுங்கும் அளவுக்கு பேராசையும், வெறுப்பை உமிழும் கொடூரமும், பொறாமையும் கூடிய மனத்துடன் செயல்பட்டு வாழ்க்கையின் அழிவுப்பாதையில் எந்தவித சலனமும் இன்றி பிரயாணம் செய்வார்கள்.

இதையெல்லாம் படிக்கும்போது மிகவும் பயமாக உள்ளதா? ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது வேறு. அடுத்தவருடன் ஒரு குடும்பத்தில் வாழ்வது என்பது வேறு. திருமணம் என்பது இரு மனத்தின் சங்கமம் அல்லவா. அதனால் தான் நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத் துணையை மிகவும் ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிலர் பழக்கத்துக்கு இனிமையாக இருப்பர். ஆனால் அவருடன் சேர்ந்து வாழும்போதுதான் அவரது உள் மனதின் வெளிப்பாடு நமக்குத் தெரியும். அதில் உள்ள வக்கிரம் தெரியும். இதை முன்னரேயே அறிந்து கொள்வது நல்லது அல்லவா? இதை காதல் திருமணத்தில் அறிந்துகொள்ள முடியுமா? காதலிக்கும்போது ஒருவர் மற்றவரை கவரவே முயற்சி செய்வார்கள். அதில் உண்மை எப்படி இருக்கும்? ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள சில வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதைத்தான் நான் உங்களுக்கு தருகிறேன்.

திருமணப்பொருத்தம் காணும்போது சந்திரன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருப்பது உசிதம்.

அப்படிப்பட்ட ஜாதகர் சந்திரன் எந்த ராசியில் தனித்து இருக்கிறாரோ அந்த ராசியின் பாதிப்பில் மட்டும்தான் இருப்பார்.

மேஷத்தில் சந்திரன் தனித்து இருப்பின் ஜாதகர் சிந்தனையற்ற செயல் புரிபவராகவும், தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்பவராகவும் விளங்குவார். அதே சமயம் ஒளிவு மறைவு இல்லாதவராக மனதில் பட்ட்தை அப்படியே பேசுபவராகவும் செயல் புரிபவராகவும் விளங்குவார்.

ரிஷபத்தில் இருப்பின் ஜாதகர் திடமாக முடிவுகளை எடுப்பவராக இருப்பர். ஆயினும் அவருடைய முடிவுகளில் பிடிவாதம் இழையோடும். இது தவிர்க்க முடியாத ஒன்று.

மிதுனத்தில் இருப்பின் அவருடைய முடிவுகளில் இரட்டைத்தன்மை இருக்கும். அதில் அவரது புத்திசாலித்தனம் வெளிப்படும்.

கடகத்தில் இருப்பின் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு உணர்ச்சி வயப்பட்டு முடிவெடுப்பவராக இருப்பார்.

சிம்மத்தில் இருப்பின் ஜாதகர் அதிகாரம், தான் என்கிற அகங்காரம் ஆகியவற்றுடன் கூடிய,  அதே சமயம் நேர்மையான பிரகாசமான முடிவுகளை எடுப்பார்.

கன்னியில் இருப்பின் ஜாதகர் தீர்க்கமாக சிந்தனை செய்து, யதார்த்தமான அதே சமயத்தில் உணர்ச்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் முழுமையான முடிவுகளை எடுப்பார்.

துலாத்தில் இருப்பின் ஜாதகர் அலை பாயும் மனதுடன், அடுத்தவரை நேசிக்கும் மனதுடையவராக இருந்து முடிவெடுப்பதில் சிரமப் படுவார்.

விருச்சிகத்தில் இருப்பின் ஜாதகர் அடுத்தவரை நேசிப்பவராக, நன்றியுள்ளவராக இருப்பார். ஆனால் தொட்டால் சிணுங்கியாக இருப்பார். அவரது முடிவுகள் பலரால் சில சமயம் ஏற்றுக்கொள்ளப்படாது.

சந்திரன் தனுசு ராசியில் இருப்பது ஒரு வரம். அடுத்தவருடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெருந்தன்மையுடன் முடிவேடுப்பவராக ஜாதகர் விளங்குவார்.

மகர ராசியில் இருப்பின் ஜாதகர் எல்லோரிடமும் நட்பு பாராட்டுபவராகவும், துல்லியமாக ஆராய்ந்து முடிவெடுப்பவராகவும் விளங்குவார். அதே சமயம் எல்லோரிடமும் துல்லியம் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவார் மற்றும் எதிர்பார்ப்பார்.

கும்ப ராசியில் சந்திரன் தனித்து இருப்பின் ஜாதகர் ஆழ்ந்த யோசனை உள்ளவராகவும், தனித்திருப்பதில் விருப்பம் உள்ளவராகவும், அடுத்தவரிடம் அதிகம் நட்பு பாராட்டாதவராகவும் அதே சமயத்தில் மனித நேயம் மிக்கவராகவும் இருப்பார்.

மீன ராசியில் சந்திரன் தனித்திருப்பின் ஜாதகர் பெரிய மனதுடன் எல்லோரையும் நேசிப்பவராக இருப்பார். ஆனால் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொள்பவராக இருப்பார்.

இப்படி தனித்திருக்கும் சந்திரனுக்கு உள்ள குணங்கள் சுபர்களின் சேர்க்கையால் நல்ல குணங்களின் வெளிப்பாடும், தீயவர்களின் சேர்க்கையால் தீய குணங்களின் வெளிப்பாடும் மிகுந்ததாக இருப்பதில் ஐயமில்லை.

சந்திரன் சுக்கிரனுடன் சேரும்போது ஜாதகர் மிகவும் நட்பு பாராட்டுபவராகவும் அழகை ஆராதிப்பவராகவும் இருப்பார்.  இது சந்திரன் எந்த ராசியில் சேர்ந்திருந்தாலும் வெளிப்படும் குணமாக இருக்கும். பணிவு, அழகாக செயல்படுதல், சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளுதல், எதிர் காலத்தில் நம்பிக்கையுடன் இருத்தல் போன்ற குணங்கள் இவரிடம் மிகுந்திருக்கும்.

சந்திரன் குருவுடன் சேரும்போது ஜாதகருக்கு பெருந்தன்மையுடன் கூடிய அடுத்தவரை ஏற்றுக்கொள்ளும் / மன்னிக்கும் சுபாவம், அடுத்தவரால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை, ஆன்மீக உணர்வு, நட்பு பாராட்டுதல் போன்ற குணங்கள் மிகுந்திருக்கும். சந்திரன் இருக்கும் ராசிக்குத் தகுந்தார்ப்போல் இத்தன்மைகள் வெளிப்படும்.

சந்திரன் 6 (ருண, ரோக, சத்ருஸ்தானம்), 8 ( தவறுகள் நேரும் ஸ்தானம்), 12 ( இழப்பு மற்றும் பலவீனத்தை அடையாளம் காட்டும் ஸ்தானம்) ஆகியவற்றில் இருப்பின் அது ஆரோக்கியமற்ற மன நிலையைக் காட்டுகிறது. அதே சமயம் இந்த வீடுகளில் சந்திரன் இருந்தாலும் சுபர் பார்வை அல்லது சேர்க்கை, சந்திரனின் பலமான நிலை ஆகியவை ஜாதகரின் குறைபாடுகளை நீக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அமைப்புகள் ஜாதகரின் மன நிலையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுகின்றன. அதே சமயம் ஜாதகத்தில் உள்ள மற்ற கிரக நிலைகலையும் கணக்கில் கொள்வது அவசியம். எல்லா நிலைகளையும் நன்கு ஆராய்ந்து ஜாதகரின் குண நலனும் செயல்பாடும் இயல்பாக இருக்குமா அல்லது இயல்பு மாறி இருக்குமா என்பதை ஆராய வேண்டும்.

·         குரு லக்னத்திலும் செவ்வாய் 7 ஆம் வீட்டிலும் இருப்பது குண மாற்றத்துக்கு அடையாளம். மேஷ லக்னமாக இருந்து செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருப்பின் ஜாதகர் கொடூர மனத்துடன் வீட்டிலுள்ளவர்களை மிரட்டுபவராக விளங்குவார்.
·         சனி லக்னத்திலும் செவ்வாய் சனி இருக்கும் வீட்டிலிருந்து 6, 8 அல்லது 12 ஆம் வீடுகளில் இருப்பது.
·         சனி லக்னத்திலும், சூரியன் 12 ஆம் வீட்டிலும் இருந்து சந்திரன் அல்லது செவ்வாய் திரிகோணஸ்தானங்களில் இருப்பது.
·         மூன்றாம் வீட்டின் அதிபர் ராகு கேதுவின் பிடியில் மாட்டிக் கொண்டாலோ அல்லது அஸ்தங்கம் ஆனாலோ அல்லது 6 ஆம் வீட்டில் அல்லது 12 ஆம் வீட்டில் அமர்ந்து ஒரு தீயவரால் பார்க்கப்பட்டாலோ விஷ ஜுரம் அல்லது ஏதோ ஒரு ஒவ்வாமையினால் மன நிலை பாதிப்படையும். உதாரணமாக மேஷ லக்னமாக அமைந்து புதன் ராகு அல்லது கேதுவின் பிடியில் மாட்டிக்கொண்டு கன்னி அல்லது மீனத்தில் அமர்ந்து சனியினால் பார்க்கப்பட்டால் மன நிலை பாதிப்பு இருக்கும்.
·         12 ஆம் வீட்டில் தேய்பிறைச் சந்திரன் சனியுடன் சேர்ந்து அமர்வது. இப்படி சொல்லப்பட்ட அமைப்புள்ள ஜாதகர் வெளி உலகத்தில் மிக சாதாரணமாகப் பழகினாலும் மனதிற்குள்ளே பெரிய போராட்டத்துடன் கூடிய, கழிவிரக்கத்தினால் ஆட்கொள்ளப்பட்ட மாறுப்பட்ட மன நிலை உள்ளவராகவே விளங்குவார்.
·         இரண்டாம் வீட்டின் அதிபரும் சனியும் தீயவர்களுடன் சேர்ந்தால் மன நிலையில் மற்றும் பேச்சில் தடுமாற்றம் இருக்கும்.
·         சனியுடன் சந்திரன் சேர்ந்து லக்னத்தில் அமர்ந்து புதனால் பார்க்கப்பட்டால் மண வாழ்க்கையின் அமைதியில் பாதிப்பு ஏற்படும்.
·         சந்திரன் ராகு / கேதுவுடன் சேர்ந்து லக்னத்தில் அமர்ந்து, திரிகோணஸ்தானங்களில் தீயவர்கள் அமர்ந்தால் ஜாதகர் மன பாதிப்புக்குள்ளாகி அடுத்தவரைக் கெடுக்கும் எண்ணத்துடன் கூடியவராக விளங்குவார்.
·         4 ஆம் வீட்டில் ஒரு தீயவர் அமர்ந்து நான்காம் வீட்டின் அதிபர் இன்னொரு தீயவருடன் சேர்க்கை பெற்று இருப்பின் ஜாதகருக்கு பகை உணர்ச்சி அதிகம் இருக்கும். அடுத்தவரை எளிதில் மன்னிக்க மாட்டார்.
·         சனி லக்னத்திலும் செவ்வாய் 5 அல்லது 7 அல்லது 9 ஆம் வீட்டில் இருப்பின் மண வாழ்க்கை பாதிக்கும்.
·         சந்திரனும் புதனும் லக்னத்தில் ஒரே நக்ஷத்திர பாதத்தில் மாட்டிக்கொண்டால் மனம் மற்றும் புத்தி பேதலிப்பினால் செயலில் தடுமாற்றம் ஏற்படும்.
·         பலமில்லாத சந்திரன் ஒரு தீயவருடன் சேர்க்கை பெற்று லக்னத்தில் அல்லது 5 ஆம் வீடு, 8 ஆம் வீடு அல்ல்து 9 ஆம் வீடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்தால் மன பாதிப்பு இருக்கும்.
·         7 ஆம் வீட்டில் மாந்தி ஒரு தீயவருடன் ஒரே நக்ஷத்திர பாதத்தில் இருப்பின் மண வாழ்க்கை பாதிக்கும்.
·         தீயவரோடு சேர்ந்த புதன் 3, 6, 8 மற்றும் 12 ஆம் வீடுகளில் அமர்ந்தால் புத்தி தடுமறும்.
இப்படி சொல்லப்பட்ட அமைப்புகளை தனித்துப் பார்க்கக் கூடாது. நல்ல வலுவான லக்னம், வலுவான சந்திரன், புதன், சுபர்களின் சேர்க்கை அல்லது பார்வை போன்ற தொடர்புகள் இப்படிப்பட்ட அமைப்பினால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கும்.

மேலே சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களையும் மனதில் கொண்டு ஒரு ஆணையும் ஒரு பெண்னையும் சேர்க்கும் பணியில் ஜோதிடர்கள் ஈடு பட வேண்டும் எனபதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதை விடுத்து, 10 க்கு 7 பொருந்துகிறது, 10 க்கு 8 பொருந்துகிறது என்று கணக்குப் போட்டால் அது ஒருவரது மண வாழ்க்கையை பாதிக்கும். இந்தக் கட்டுரையில் நான் இரண்டு விஷயங்களைத் தான் எடுத்துக் கொண்டுள்லேன். ஒன்று ஒருவரின் அகால மரணம். இன்னொன்று ஒருவரின் மனம், புத்தி ஆகியவற்றின் செயல்பாட்டில் உள்ள மாறுபட்ட நிலை. இங்கு கொடுக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயம் உங்கள் சிந்தனையைத் தூண்டும் என்றே கருதுகிறேன். முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், பயனடையுங்கள்.

வாழ்க வளமுடன்

நாராயணன்



No comments:

Post a Comment